குறளும் மனுவும்
இந்த வருடம், என் பிறந்தப் பரிசாக நண்பர் ஒருவர் கொடுத்த நூல் திரு.திருலோக
சீதாராம் எழுதிய மனுதர்ம சாஸ்திரம். திருலோக சீதாராம் மிக மென்மையாக தன் மொழிப் பெயர்ப்பை செய்திருக்கிறார் என்பது வலையுலகில் காணப்படும் மூலத்தைப்1 படிப்பவர்களுக்குப் புரியும். தற்போது தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வோர் தூக்கிப் பிடிக்கும், இந்து தர்மம் சாற்றும் நூல் இதுதான். மனுதர்மத்தைப் பின்பற்றி தான் திருக்குறள் எழுந்தது என்று கூறுவோரும் இருக்கிறார்கள்2.
திருக்குறளில் கூறப்படும் சில கருத்துக்கள் மனுதர்மத்தில் கூறப்பட்டாலும், அவைகள்
பொதுவான கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி, குறள் மனுதர்மத்தின்
தழுவல் என்று கூறமுடியாது. அப்படி கூறவேண்டுவதற்கு அடிப்படைக் கருத்துக்களில்
அவைகள் ஒன்றுப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்க்க வேண்டும். அகிம்சையே
(கொல்லாமை நெறி) குறளின் அடிநாதம். கொல்லாமையைத் தலையாய அறமாக குறள் போற்றுகிறது. மேலும், கொல்லாமையின் இயல்பான தன்மை புலால் மறுத்தல்.
அவற்றையும் குறள் ஏற்றிக் கூறுகிறது. அவற்றை மனுதர்மம் போற்றுகிறதா? என்றும் ஆராயவேண்டும். அப்படி பார்த்தோமானால், குறள் கூறும் அறமும், மனுதர்மம் கூறும்
அறமும் வேறு வேறாகயிருப்பதை யாரும் எளிதில் உள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குப் பார்ப்போம்!
”வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன. உலக நன்மையை முன்னிட்டே நடைபெறுவனவான வேள்விகள் செய்யப்படும்போது அது பசுவதையாகாது3.”
ஆனால் குறளோ,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை4
என்றும்,
‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று4”
என்று அழுத்தம் திருத்தமாகச் சாற்றுகிறது!!
இப்படி நிறைய முரண்பாடுகள் இருநூல்களுக்குள்ளும் விரவிக்கிடக்கின்றன. அவற்றை
எடுத்துக் காட்டின் ஒரு நூல் அளவு விரியும் என்பதால் இன்னுமொரு அடிப்படை
முரண்ப்பாட்டை மட்டும் பார்ப்போம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
மனுதர்மத்தில்5,
”மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால்
வருணத்தையும் வேதஞானம், புவிரத்தல், செல்வ மீட்டல், ஏவல் புரிதல் என்ற
கட்டுப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம்,
தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர்.” என்று
கூறப்படுகிறது.
அஃதாவது,
பிரம்ம ஸ்வரூபியாக நின்றவரான பரம்பொருள், தலையில் இருந்து பிரம்மர்களும்
(பிராமணர்கள்), தோளில் இருந்து க்ஷத்ரியர்களும், தொடையில் இருந்து
வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்றும்,
அவர்களுடைய தொழில்கள் முறையே, வேதம் ஓதுதல், குதிரை முதற்கொண்டு
அரசாட்சி முறைமை செய்தல், வாணிபம் செய்து பொருள் ஈட்டல், மற்ற
வர்ணத்தினோருக்கு ஏவல் புரிதல் ஆகிய தொழிகளை செய்யவேண்டும் என்று
மனுதர்மம் ஆணையிடுகிறது.
மேலும், பிறப்பால் எல்லா வருணத்தினோரும் ஒரே தன்மையினரல்லர் என்பது
விளக்கமாகும்.
ஆனால் சிரமண மதத்தின் வேதமாகக்6 கருதப்படும் திருக்குறளோ,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் குறள்7
உரை - மணக்குடவர்,
”எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய்
தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது
பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும்
கூறிற்று”.
அஃதாவது,
பிறப்பினால் எல்லோரும் சமம். அவரவர்கள் செய்யும் தொழிற்திறமையால்
தான் அவர்களுக்குள் வேற்றுமைக் காணப்படும், என்று குறள் அழுத்தம்
திருத்தமாக பகற்கிறது! இதனால் மனுதர்மம் சாற்றும் தர்மம் வேறு, திருக்குறள்
காட்டும் தர்மகோட்பாடுகள் வேறு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல்
விளங்கும். என்னை?
சமண இலக்கியங்களில் இருந்து அக்குறளுக்கு சான்றுகள் காட்டுவோம்.
“அன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிகனீயே
யென்றிரண்டில்லை கண்டாயிது நினதில்லமென்றான்8”
இதன் கருத்து,
”அன்றியும் அறமும் ஒன்றே அதனால் நான் அரசன், நீ வணிகன் என்று இரண்டு
பேதமில்லை. இது உனது இல்லம் என்பதாம். இதனால் சத்திரியன், வைசியன்
என்கிற ஜாதிபேதம் பிறப்பாலில்லை என்று திருத்தக்கத்தேவர் கூறுவதைக் காண்க”
மேலும்,
மேலே சொன்ன குறளை ஒற்றி எடுத்ததுபோல மகாபுராணம்9,
“மனுஷ்யஜாதி நாமகர்மத்தினுடைய உதயத்தினால் உண்டாகிய மனிதரெல்லோரும்
ஒரேவிதமாக விருந்தபோதிலும் ஒவ்வொருவரும் தம் தம் கைக்கொண்டு
அனுஷ்டித்து வந்த தொழில்களின் பேதத்தினால் பிரம்ம, க்ஷத்திரிய, வைஸ்ய,
சூத்திரரென்று நான்குவர்ணாஸ்ரமங்களாகப் பிரிந்தார்கள்”
என்றும்,
நல்ல குலமென்றுந் தீயகுலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லைத் – தொல்சிறப்பி
னாண்பொரு ளொன்றோ தவங்கல்வியாள்வினை
யென்றிவற்றா னாருங் குலம் 10
இதன் பொருள் – நல்ல குலம் மென்றும் தீய குலம் மென்றும் என்று கூறுவதெல்லாம்
வெறும் சொல் அளவேயாகும். அப்படி கூறுவதில் ஒரு பொருளும் இல்லை.
அவரவர் தவத்தினாலும், கற்ற கல்வியாலும், ஆள்வினை (முயற்சி செய்யும்
தொழில்களைக் குறிக்கும்) உடைமையாலும்தான் ஒருவருக்கும் ஆகும் குலம்.
இதனையே குறள் மேலும் விரித்து,
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்11
இதன் கருத்து, ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடையக்
கருமமே (செயல், தொழில்) காரணம்.
என்றும் கூறுவதைக் காணலாம்.
இதனால், குறள் காட்டும் தர்மமும், சமுதாயமும், மனுதர்மம் காட்டும் தர்மமும்,
சமுதாயமும் வேறு வேறாம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
----------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:
1. http://www.vedarahasya.net/manu0.htm
2. http://www.tamilpaper.net/?p=877
3. மனுதர்மம் – 5 ஆவது அத்தியாயம், புலால் உண்ண அனுமதி அதிகாரம் – பாடல் - 39
4. திருக்குறள் – 328, 259
5. மனுதர்மம் - உயிர்களின் தோற்ற அதிகாரம் – பாடல் – 31
6. “எம் ஒத்து” – நீலகேசி உரையில் வாமனாசாரியார்
7. திருக்குறள் – 972
8. சீவக சிந்தாமணி – 544
9. மகாபுராணம் – 48ஆவது பர்வம் – பாடல் – 45
10. நாலடியார் – பாடல் – 195
11. திருக்குறள் - 505
2 comments:
என்னாது? மனுவும் குறளும் ஒன்னே போல் பேசுது-ன்னு சொல்றாங்களா?
அடக் கொடுமையே!
விட்டா, ம'னு'-ல்ல உகாரம் இருக்கு, 'கு'றள்-ல்ல உகாரம் இருக்கு! ரெண்டுத்துக்கும் பல பொருத்தம்-ன்னு சொன்னாலும் சொல்வாங்களோ?
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனு ஆதி? ஒரு குலத்துக்கு ஒரு நீதி!
திரு. KRS அவர்களுக்கு.. நான் சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு இந்தியன். திரு. ஓங்காரனந்தா அவர்களின் திருக்குறள் சொற்பொழிவு ஒவ்வொரு வருடமும் இங்கு நிகழும். அப்போது அவர், மனு தர்மத்திற்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமையை கூற கேட்டிருக்கிறேன். எனவே பானுகுமரின் ஒப்பீடு ஏற்றுகொள்ளகூடியதே.
திரு. பானு குமார்..அருமையான விளக்கம்..என்றாலும், பொதுவாக நல்ல விஷயங்களை எல்லா மதங்களும் கால சூழ்நிலைக்கேற்றவாறு போதித்திருக்கின்றன. பல விஷயங்கள் எல்லா மதத்திற்கும் பொதுவான நீதிகளே. எனவே, கீதை,வேதம், அங்கம், கல்ப சூத்திரம், தம்மபதம் ஆகியவற்றில் உள்ள நற்கருத்துக்கள் திருக்குறளில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
திருவள்ளுவர் சமண சார்பு உடையவராய் இருந்திருக்க வாய்ப்புண்டு .ஆனால் நிச்சயம் அவர் ஜைன கருத்துக்களை மட்டும் வலியுறுத்தவில்லை. பொதுவாய் எல்ல்லோருக்கும் பயன்படும் நோக்கில்தான் எழுதிஉள்ளார். மேலும் வைதீக கருத்துகளில், அவர் நோக்கில் நல்லவற்றை ஏற்று, அல்லவற்றை தள்ளி உள்ளார் என்பது என் தனிப்பட்ட கருத்து. திருக்குறலாசிரியரை ஒரு மதகூட்டில் அடைப்பது உங்கள் விருப்பம் ; ஆனால் அவர் ஏழுதிய திருக்குறளை மத கூட்டில் அடைப்பது தவறு என்பது என் கருத்து.
- டி. ஆர். வர்மா சாஸ்திரி., சிங்கப்பூர் .
Post a Comment